இலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம் நடத்த 300 ஆசிரியர்கள் தயார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஒரு வாரத்தில், 'நீட்' தேர்வு பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி அளிக்க, 300 அரசு பள்ளி ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.



பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில்சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் பல, நீட் தேர்வுக்கான பயிற்சி தருகின்றன. ஆனால், அதற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை, தமிழக அரசு, 2017ல் அறிமுகம் செய்தது. அப்போது, ஏற்கனவே நடந்த, நீட் தேர்வுகளின் வினா வங்கி மற்றும் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய புத்தகம்,மாணவர்களுக்கு இலவசமாக தரப்பட்டது. பள்ளிகளில், தினமும், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையிலும், வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வழங்கப்பட்டது. பொதுத்தேர்வு முடிந்த பின், பல்வேறு கல்லுாரி வளாகங்களில், உணவு, விடுதி வசதியுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் தரப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டுக்கான, தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி, இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ளது.

இதற்காக, பிளஸ் 2 பாடம் நடத்தும் திறமைமிக்க, 320 ஆசிரியர்கள், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று, பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்கள், மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க உள்ளனர். மேலும், 2017 - 18ல் நடந்த, நீட் தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள் இணைந்த, வினா வங்கி கையேடும் தயாராக உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments