சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு- சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்


உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) இணையதளத்தில் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. முதல்முறையாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப டிஆர்பி, கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து கீ ஆன்சர்' எனப்படும் உத்தேச விடைகள் கடந்த அக்டோபர் 10 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2017 -ஆம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து டிஆர்பி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டிஆர்பி மூலம் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்குரிய விடைக்குறிப்பு தயார் செய்யப்பட்டு, அதன்படி தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

போட்டியாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

இறுதி விடைக்குறிப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு இரண்டு பேர் வீதம் அழைக்கப்பட உள்ளனர்.

Comments