ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடிய, விடிய உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.


கோரிக்கைகள் நிறைவேறும் வரை அங்கேயே தங்கும் வகையில், ஷாமியான பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தினமும் சட்டசபைக்கு செல்லும் சாலை வழியில் இந்த போராட்டத்தை நடத்தினர். ஆனாலும் அரசு சார்பில் இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. 

அரசிடம் நிதியில்லாததால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பேட்டி அளித்தார். சட்டசபையில் நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக பேசியபோது கூட, ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்துவிட்டது.


அரசு எப்படியும் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கும் என்று நம்பிய நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடாததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெறாததால் நேற்றும் 2வது நாளாக எழிலகத்தில் இரவு முழுவதும் விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தனர். 

முன்னதாக உண்ணாவிரதம் இருந்த பலரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர் சங்கத்தை சேர்ந்த டெய்சி மற்றும் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த மோசஸ் உள்பட 4 பேர் நேற்று திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை சக நிர்வாகிகள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


இந்த நிலையில், இன்று 3வது நாளாக ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மேலும் பலரது உடல்நிலை மோசம் அடைந்து வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், போராட்ட இடத்துக்கு இன்று காலை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். 

நிர்வாகிகள் மாயவன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அரசு கண்டுகொள்ளாவிட்டாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Comments