நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில மையங்களில்தான் எழுத வேண்டும் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில மையங்களில்தான் எழுத வேண்டும் என்று தெரிவித்த நிலையில்,
தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தற்போது தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை என்ற சிபிஎஸ்இ தரப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு வழக்கின் பின்னணி :

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் 6-ம் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் 3 தேர்வு மையங்களை குறிப்பிடலாம். அதில் ஒன்று ஒதுக்கப்படும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது.இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவும், சிபிஎஸ்இ  மேல்முறையீடும்

புதிதாக நீட் தேர்வு எழுத அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். எனவே இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காளிமுத்து சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு நீதிமன்றம் தடையும்  விதித்தது.

இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என கடந்த 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்கள் நிரப்பப்பட்ட பிறகே , பிற மாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்வு மையங்களுக்கு தேவையான நீட் வினாத்தாள்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதால் தற்போது தேர்வு மையங்களை மாற்றுவதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவை சிபிஎஸ்இ எதிர்த்துள்ளது.

உச்சநீதிமன்றம் மறுப்பு :

இந்நிலையில் சிபிஎஸ்இ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும் போதிய நேரமின்மை காரணமாக, மாணவர்கள் தங்களுக்குரிய வெளி மாநில மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்றும் அடுத்த வருடம் தமிழக மாணவர்களுக்கு இதுபோன்ற ஓரவஞ்சனை செய்யாது, அவர்கள் விண்ணப்பித்த இடங்களிலியே தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது

Comments