பள்ளிகளில் மீண்டும் ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டம்

குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அத்திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, மத்திய அரசு முயற்சியால் பெங்களூருவில் மண்டல ஆங்கிலக் கல்வி மையம், கடந்த 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு தமிழக தொடக்கப் பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலக் கல்வி மையம் சார்பில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச ஏதுவாக ‘ஹலோ இங்கிலிஷ்’ என்ற பெயரில் தலா சுமார் 30 நிமிடங்கள் அளவில் ஓடக்கூடிய 20 வீடியோக்களைக் கொண்ட சிடி தொகுப்பை உருவாக்கியுள்ளது. 

அதை தமிழக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த 2007-ம் ஆண்டு வழங்கி இருந்தது. அவ்வாறு சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.


அப்போது பள்ளிகளில் சிடியை இயக்கும் கருவி மற்றும் தொலைக்காட்சி இல்லாத காரணத்தால், அந்த சிடிக்களை ஆசிரியர்கள் யாரும் பயன்படுத்த முயற்சி செய்யவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு 2007-ம் ஆண்டு பொறுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே ‘ஹலோ இங்கிலிஷ்’ சிடி குறித்து தெரிகிறது. 

மற்ற ஆசிரியர்கள் யாருக் கும் அத்திட்டம் குறித்து தெரியவில்லை. அதை கல்வித்துறையும், அனைவருக்கும் கல்வி திட்டமும் கண்காணிக்கவில்லை. அதனால் ‘ஹலோ இங்கிலிஷ்’ திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது மாநகராட்சி பள்ளிகளுக்கு, கணினி, மடிகணினி வழங்கப்பட்ட நிலையில், ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டத்தை செயல்படுத்த, அந்த சிடிக்களே பல பள்ளிகளில் இல்லை.

இதுதொடர்பாக ‘தி இந்து’ சார்பில், கடந்த ஆண்டு மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) இருந்த எம்.கோவிந்தராவ் கவனத்துக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, ‘ஹலோ இங்கிலிஷ்’ சிடிக்களைத் தேடி பிடித்து, முறையாக பயன்படுத்த உத்தரவிட்டார். 


அவர் மாற்றலாகிச் சென்றதும், பயிற்சி தொய்வைச் சந்தித்தது. தற்போது துணை ஆணையராக (கல்வி) உள்ள மகேஸ்வரி ரவிக்குமார் கவனத்துக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி சிடி தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும், ஆய்வு செய்து, அதை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் குழந்தைகளிடம் முறையாக சென்றடையும் என்று உறுதியளித் துள்ளார்.

Comments