இந்த மாத இறுதிக்குள் டிடிஎஸ் செலுத்தாவிட்டால் தினமும் 200 வீதம் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து  பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான  வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் வரி பிடித்தம் செய்வோர் கவனத்துக்கு. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்த இந்த மாதம் 31ம் தேதி கடைசி. 

பிடித்தம் செய்த வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதித்தால், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும்.  எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்திருந்தால் உடனடியாக வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும். 


பிடித்தம் செய்யாதவர்கள் உடனடியாக பிடித்தம் செய்து இந்த மாதத்துக்கு செலுத்த வேண்டும். இவர்கள் https://www.tdscpc.gov.in. இணையதளத்தில் தங்களது டான் எண் மற்றும் பிடித்தம் செய்தவர்களின் பான் எண் பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது டான் எண் குறிப்பிடாமல் டிடிஎஸ் பட்டியல் சமர்ப்பித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முக்கிய குறிப்பு: இந்த பணத்தை அந்தந்த டிடிஓ- க்கள் சம்பளம் வழியாக மட்டுமே பிடித்தம் செய்தல் வேண்டும்.

Comments