அரசு பள்ளியில் நீட் பயிற்சி அளித்ததால் மருத்துவ கல்வியில் 2 ஆயிரம் பேர் சேரும் வாய்ப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் சேர்வார்கள் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  


பொது நூலக இயக்ககம் சார்பில் குழந்தைகள் பயனடையும் வகையில் ‘கோடை கொண்டாட்டம் 2018’ என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நேற்று நடந்தது. இந்த கோடை கொண்டாட்டம் சென்னை கன்னிமரா பொது நூலகம் மற்றும் 32  மாவட்ட மைய நூலகங்களில் மே மாத இறுதி வரை நடக்கிறது.

தொடக்க விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பயிற்சியை தொடங்கி வைத்து பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: 

பொது நூலகத்துறையின் மூலம் கோடை கொண்டாட்டம் என்ற பயிற்சி முகாம் இன்று தொடங்கி மே மாதம் வரை நடக்கிறது. பள்ளிகளில் 6ம் வகுப்பு  முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவியர் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். 


மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை  எதிர் கொள்ள தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் 3145 மாணவ மாணவியர் பயிற்சி முடித்து இன்று வீடு  திரும்புகின்றனர். 6ம் தேதி நீட் தேர்வு எழுத உள்ளனர். 

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் பயிற்சி பெற்றவர்கள் 2000  பேர் டாக்டர் படிப்பில் சேர்வார்கள். இந்நிலையில், 1, 6, 9, பிளஸ்1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, வரும் 4ம் தேதி முதல்வர்  வெளியிட உள்ளார். . 15 நாட்களுக்குள் சிறப்பு ஆசிரியர்கள் காலியிடங்கள் எவ்வளவு இருக்கிறது என்று பட்டியல் தயாரிக்கிறோம். விரைவில் தேர்வு முடிவு வெளியிடப்படும். 

Comments