தமிழகத்தில் முதல்முறையாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பிளஸ் 1 தேர்வு முடிவு நாளை வெளியீடு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பொதுத் தேர்வுகள் நடப்பது போல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.

இதையடுத்து இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 7070 மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்த 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவியரும், தனித் தேர்வர்களாக 1753 மாணவ மாணவியரும் பிளஸ் 1 தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நாளை காலை  9 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது.

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல்  மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம். மேலும்  பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு  அவர்களின் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

 மதிப்பெண் பட்டியல்:  பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணைய தளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத்தேர்வுத்  துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in  இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல்: பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: விடைத்தாள் நகல் பெறுவதற்காக பகுதி 1 மொழிப்பாடத்துக்கு 550, மொழிப் பாடாம் 2 (ஆங்கிலம்), 550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 275கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்கள் தலா 305, மற்ற பாடங்களுக்கு தலா 205 செலுத்த வேண்டும். கட்டணங்கள் அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும். சிறப்பு துணைத் தேர்வு:  பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தனியாக அறிவிக்கப்படும்.

Comments