நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்து 1,6,9,11ம் வகுப்புகளுக்கு பாடநூல்கள் விற்பனை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதிய நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாடநூல்கள் 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, பள்ளிகல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 


1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களை மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி இயக்ககம் வாயிலாக மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 2018-19ம் கல்வியாண்டிற்கென முதல் கட்டமாக 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக அமைக்கப்பட்ட வடிவமைப்புக் குழு மூலம் தரம் உறுதி செய்யப்பட்டு புதிய பாடநூல்கள் தரமான முறையில் அச்சிடப்பட்டுள்ன.

புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்கள் சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

க்யூ.ஆர் கோடு போன்ற சிறப்பு அம்சங்களுடன் பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட மேலட்டையைப் பயன்படுத்தி பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலும், புதிய பாடத்திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்குரிய விலையில்லாப் பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணாக்கர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான விற்பனைப் பாடநூல்கள் விற்பனை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. 11ம் வகுப்புகளுக்கான விற்பனைப் பாடநூல்கள் ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் துவங்கும் முன்பு விற்பனை தொடங்கப்பட உள்ளது. 

புதிய நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Post a Comment