தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.


அந்தவகையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ. ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சீபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். ஆனால் மாணவர்கள் 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். 9.30 மணிக்கு பின்னர் தேர்வு மையத்துக்குள் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ‘நீட்’ இணையதள பக்கத்தில் உள்ள நேரம் எல்லா மையங்களிலும் பின்பற்றப்பட உள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த விவரங்கள் வருமாறு:-

* வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ் எடுத்துச்செல்லக்கூடாது.

* பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், அளவுகோல், பரீட்சை அட்டை, பென் டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா, பேனா, ஸ்கேனர் எடுத்துச்செல்லக்கூடாது.

* கைப்பை, மணிபர்ஸ், பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், கண்ணாடி, கேமரா, உலோக பொருட்கள், சாப்பிடும் உணவுகள், தண்ணீர் பாட்டில் அனுமதி கிடையாது.

* மோதிரம், காதணி, மூக்குத்தி, சங்கிலி, ஹேர் கிளிப், தலை முடியில் மாட்டும் பெரிய ரப்பர், வளையல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

* செல்போன், புளூடூத், ஹெட்செட், மைக்ரோபோன், பேஜர் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

* வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள் அணிந்து வர வேண்டும். அதில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்றவை இடம் பெறக்கூடாது.

* சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரவேண்டும். குறைந்த உயரத்திலான செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் காலணிகளுக்கு, ஷூ-க்கு அனுமதி கிடையாது.

* தேர்வு எழுத வரும் மாணவர்கள் பொருட்களை வைப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்காது.

* கலாசாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.

* சேலை அணிந்து வரக்கூடாது.

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றப்படாத மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

Comments