தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

ஐகோர்ட் உத்தரவை பொது அறிவிப்பாக இணையதளத்தில் உடனடியாக வெளியிட ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் 6-ம் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் 3 தேர்வு மையங்களை குறிப்பிடலாம். அதில் ஒன்று ஒதுக்கப்படும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கணினி மூலம் ஒதுக்கப்படும் இந்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது. இதனால் புதிதாக நீட் தேர்வு எழுத அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். எனவே இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

Comments