மகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்! உயர்நீதிமன்றம் உத்தரவு

மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரசு மருத்துவர்களாக இரண்டு ஆண்டு பணியாற்றியவர்களுக்கு முதுகலை மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் பணியாற்றிய பகுதிகளை பொறுத்து சலுகை மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் கல்வியாண்டில் சேர்க்கை தொடர்பான அறிவிப்பாணையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இதில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் அரசுமருத்துவர்களாகப் பணி யாற்றி இருக்க வேண்டும் எனவும், மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தால் அது பணிக்காலமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அருணா என்பவர் உள்ளிட்ட பல மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி தனி நீதி பதி, இது தொடர்பாக முடிவு எடுக்க இரு நீதிபதிகள் அமர்விற்கு வழக்கை மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்ஊழியர்களையும், அவர்களின் சிசுக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலத்தைபணிக்காலமாக கருதி, சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Comments