கல்வி சீரால் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு



பெற்றோரின் கல்வி சீர் மூலம், கோபி அருகே, ஏழூர் அரசு துவக்கப் பள்ளியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி அசத்தியுள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, ஏழூரில், பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி உள்ளது. 1912ல் துவங்கிய பள்ளியில், 1 முதல், 5ம் வகுப்பு வரை, 164 குழந்தைகள் படிக்கின்றனர்.

தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி தலைமையில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.இப்பள்ளி வளர்ச்சிக்காக, அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர், கல்வி சீராக நிதி வழங்குகின்றனர். பள்ளியில், ஒரு கான்கிரீட் கட்டடமும், ஓடுகள் வேயப்பட்ட மூன்று வகுப்பறை கட்டடங்களும் ஏற்படுத்தப்பட்டன.

கல்வி சீர் நிதி மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளனர்.வகுப்பறை கட்டடங்கள் மீது விழும் மழைநீர், ஒரு துளி கூட வீணாகாமல், நிலத்தை அடைய வசதியாக, மூன்று இடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கிஉள்ளனர்.


வகுப்பறையை சுற்றி விழும் மழைநீர், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அடையும் வகையில், வசதிகள் செய்துள்ளனர்.தவிர, புரொஜக்டர் மூலம், குழந்தைகளை கவரும் வகையில், பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் விதமாக, சிலம்பாட்டம் பயிற்சி அளிக்கின்றனர். 

இவை அனைத்தும், கல்வி சீர் மூலம் செய்யப்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'மூன்றாண்டுகளில் மட்டும், பெற்றோர் பங்களிப்பாக, மூன்று லட்சம் ரூபாய் வரை நிதியுதவி செய்துள்ளனர். 'பெற்றோரின் ஆர்வம் மற்றும் பங்களிப்பால், எங்கள் பள்ளி குழந்தைகள், தன்னார்வத்தோடு கல்வி பயில்கின்றனர்' என்றனர்.

Comments