தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வழியாகவோ அல்லது தனியாகவோ எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தகுதியான படிப்புதான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ராஜி உள்ளிட்ட சட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில பாடத் திட்டத்தின்படி 10 அல்லது பிளஸ் 2 தேர்வுகளை எங்களில் சிலர் தனித் தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு சிலர் 10-ஆம் வகுப்பை முடித்த பிறகு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள என்ஐஓஎஸ்' எனும் தேசிய திறந்தவெளி பள்ளியில் 2 ஆண்டு படிப்பை முடித்துள்ளோம். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் மூலமாக 3 ஆண்டு சட்டப்படிப்பையும் படித்து முடித்துள்ளோம். நாங்கள் 10 அல்லது பிளஸ் 2 தேர்வை தனியாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால், எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மறுக்கிறது.

எனவே, எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.தலைமை நீதிபதி விசாரணை: இந்த மனு மீதான விசாரணை தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முழுஅமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.



இதே போன்று 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழியாகப் பெற்றிருக்க வேண்டும். அந்த படிப்புகளை அவர்கள் தொலைதூரக்கல்வி வழியாகவோ அல்லது தனியாக எழுதியோ தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்யத் தகுதியான படிப்புதான்.

10, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை உரிய வழிகளில் இல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழங்கள் மூலமாகவோ நேரடியாகவோ படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய முடியாது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தனியாகத் தேர்வு எழுதி தற்போது சட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ள, மனுதாரர்களான இந்த மாணவர்களை வழக்குரைஞர்களாக 3 மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments