அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்




''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.


  சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:

வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர்.

இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்