வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 4 வித சீருடை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நான்கு வித சீருடை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். விருதுநகரில் கனவு ஆசிரியர் மற்றும் புதுமைப்பள்ளி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‘‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நான்கு வித சீருடை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்பிற்கு ஒரு சீருடையும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு ஒருவித சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 5ம் வகுப்புகள், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ஒருவித சீருடை வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 3 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 9, 10, 11, 12 மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதிகளுடன் ஒருங்கிணைந்த வசதி செப்டம்பர் மாதத்திற்குள் அமைக்கப்படும். நடப்பாண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்ட புத்தகங்களை சிபிஎஸ்இ குழுவினர் பாராட்டியுள்ளனர். 500 ஆடிட்டர்கள் மூலம் 25 ஆயிரம் மாணவர்களுக்கு சிஏ பட்டயப்படிப்பு கற்றுத்தர இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்படும்.அடுத்த ஆண்டு பிளஸ் 2 பாடத்திட்டத்தில் ‘ஸ்கில் டிரெய்னிங்’ தொடர்பாக 12 புதிய பாடத்திட்டம் இணைக்கப்படும். பிளஸ் 2 படித்தால் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்கும் என்ற நிலை உருவாகும். தமிழகத்தில் 848 தொடக்கப்பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.

கல்வித்துறையில் உயர் அலுவலர்கள் அனைவருக்கும் வாகன வசதி செய்து தரப்படும்’’ என்றார். காலில் விழுந்த நூலகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மைய நூலக அலுவலக கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்துவைத்தார். பின்னர் வெளியே வந்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், ராமகிருஷ்ணம் பகுதியை சேர்ந்த ஊர்ப்புற நூலகர் ராஜதுரை, அமைச்சர் காலில் விழுந்தார். அப்போது ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments