மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர் மாற்றம் ரத்து

அரசு பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்றிய போது, அவரை போக விடாமல் மாணவர்கள் நடத்திய பாச போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது.

மீண்டும், 10 நாட்கள், அதே பள்ளியில் அந்த ஆசிரியரை பணி புரிய, மாவட்ட கல்வி அதிகாரிஉத்தரவு பிறப்பித்தார்.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த, வெளிகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர் பகவான், 28. பணி நிரவல் காரணமாக, வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.அவரை இட மாற்றம் செய்ததை கண்டித்து, இரண்டு நாட்களுக்கு முன், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், ஆசிரியர் பகவானை சூழ்ந்துக் கொண்டு, 'இப்பள்ளியை விட்டு போகக் கூடாது' என, ஆசிரியரின் கால்களை பிடித்து கதறி அழுதனர்.இது, சமூக வலைதளங்களில், 'வைரலாக' பரவியது. போராட்டம் குறித்து அறிந்த, மாவட்ட கல்வி அதிகாரி, ராஜேந்திரன், ஆங்கில ஆசிரியர் பகவானை, மீண்டும் அதே பள்ளியில், தொடர்ந்து, 10 நாட்கள் பணி புரிய அனுமதி அளித்தார்.இதையடுத்து, நேற்று, வெளிகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளிலேயே, அந்த ஆசிரியர் பாடங்களை எடுத்தார்; மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்.

Comments