தனியார் பள்ளி முதலாளிகள் கோரிக்கை மனுவை கிழித்து வீசிய செங்கோட்டையன்??? அரசு பள்ளிகளுக்கு பொற்காலமா???







தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபின்பு நடக்கும் ஆட்சி, மோடி.அதிமுக ஆட்சி என்று அனைவர் மத்தியிலும் பேசப்பட்டாலும் கூட, அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் சற்றே செல்வாக்கு கூடி வருகிறது. அதுவும் அந்த ஒரே ஒரு துறையால் மட்டும்தான்.
அதுதான் பள்ளிக் கல்வித்துறை, இதன் அமைச்சர் செங்கோட்டையன். இந்தத் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ். இவர்களின் கூட்டு நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளுக்கு மவுசு கூடிவருகிறது.
பிளஸ்-2 ரிசல்ட்டின் போது முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் முறைகளை மாற்றினார்கள்.

இதுதான் தனியார் பள்ளிகளுக்கு விழுந்த முதல் அடி, இரண்டாவதாக 11ம் வகுப்புக்கும் அரசு பொதுத் தேர்வு என்று அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளின் அடித்தளத்தையே ஆட்டிப்பார்த்துவிட்டது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இதனால் தனியார் பள்ளி முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைச்சரைச் சரிக்கட்ட சென்னைக்கு பயணமாகினர். அமைச்சரையும் சந்தித்தனர்.
அப்போது... உங்களின் இந்த அறிவிப்புகளால் எங்கள் பிழைப்புக்கு பாதிப்பு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன் அவர்களோ, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான எதிர்கால நலத்திட்டம், இந்தத் திட்டங்களில் இருந்து யாருக்காகவும் அரசு பின்வாங்காது என்று கறாராகத் தெரிவித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பின் அரையாண்டு தேர்வுக்குப் பின் 9ஆம் வகுப்பு பாடங்களை நடத்துவது கிடையாது. அதன்பிறகு 10ம் வகுப்பு பாடங்களையே நடத்துவார்கள். அப்படி ஒன்றரை ஆண்டுகள் 10ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் போது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.
அதுபோல பிளஸ் 1, வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்துவதுதான் வழக்கம். இதுவும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான். இதெல்லாம் கல்வித்துறை அமைச்சரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
அடுத்து அரசுப் பள்ளிகளில் நீட் NEET உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு சற்றும் குறையாத அளவுக்கு அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே இலட்சியமாக கொண்டு அமைச்சர் செங்கோட்டையன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள், விரைவில் தலையில் துண்டு போடும் நிலை உருவாகும் என சிறந்த கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர். சிறந்த கல்வியின் மூலமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி அமைக்கப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி வழங்கப்படும் என்றார். மேலும், நூலகங்களைப் பராமரிக்க தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், எத்தனை நூல்கள் வழங்கினாலும் அதனைப் பெற்றுக்கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக குழு அமைத்துள்ளாராம்.

Comments

Post a Comment