புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் வழங்குவதற்கான மாநில அளவிலான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி, சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள களிபட்டூரில் புதன்கிழமை தொடங்கவுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படிக்கும் இளம் மாணவர்களில், அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் திட்டமே இன்ஸ்ஃபையர் ' விருதுத் திட்டமாகும்.

ரூ.10,000 பரிசுத் தொகை: இதற்காக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதும், ரூ.10,000 பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொள்வர். பின்னர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகள் நடைபெறும். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இந்தச் செயல்பாடுகளுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. 2017-18 -ஆம் கல்வியாண்டுக்கு மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 232 மாணவர்கள், ஜூன் 20, 21 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம், ஆனந்த் உயர்தொழில்நுட்பக் கழகம், கலசலிங்கம் நகர், ராஜீவ் காந்தி சாலை, களிபட்டூர், சென்னை-603 103'' என்ற முகவரியில் உள்ள நிறுவன வளாகத்தில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். இதில் 23 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுதில்லியில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான போட்டிகளில் கலந்து கொள்வர்.

அமைச்சர் தலைமையில்: இந்தக் கண்காட்சி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் புதன்கிழமை (ஜூன் 20) காலை 8.30 மணிக்கு ஆனந்த் உயர்தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெறும். இதில் உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் ச.சௌந்தரராஜ பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்

Comments