ஆன்-லைன்’ மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


இந்த வருடம் முதன் முதலாக ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி எந்த பகுதியில் இருந்தும் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று இலவசமாக பதிவு செய்யலாம். இந்த விவரங்களையும் இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆன்-லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதாவது பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-2 ஹால்டிக்கெட் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதி சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க தேவையில்லை. தேர்வு முடிவு வந்தபிறகு அரசு தேர்வுத்துறையில் இருந்து சி.டி., அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படும். அந்த சி.டி.யில் உள்ள மதிப்பெண்களை பார்த்து விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களை விண்ணப்பத்தில் பதிவு செய்யப்படும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு எந்த பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் அந்த மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்

Comments