பள்ளித்திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பிள்ள சமூக ஆர்வலர்கள், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

முன்னதாக தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கோடை விடுமுறை முடிந்து 2018-2019ம் கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி அன்று அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளன. இந்த சூழலில் 1ம் தேதியன்று மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், நேர்த்தியாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

அதற்கு ஏற்ப, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளி வளாகத்தை தயார்படுத்திட வேண்டும் என்று கூறியிருந்தது.

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளி திறக்கப்பட உள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்களும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வலியுறுத்தியுள்ளனர். 


தற்போது 6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான புதிய புத்தகங்கள் இன்னும் கடைகளில் கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் அவசர அவசரமாக பள்ளிகளை திறப்பது ஏன் என வினவியுள்ளனர். 

வெயிலின் தாக்கத்தை மாணவர்கள் சமாளிக்க கூடிய வகையில் பெரும்பாலான பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளித்திறப்பை தள்ளி வைக்கவும் அவர்கள் கோரியுள்ளனர். மேலும் பாடப்புத்தகத்தை அரசு மாற்றியதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறதா என எனவும் அவர்கள் வினவியுள்ளனர். 

Comments