தனியார் பள்ளிக்கு இணையாக ஜொலிக்கும் அரசுப்பள்ளி!!!

அரியலுார் அருகே, தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு, பல்வேறு வண்ணங்களுடன் ஜொலிக்கும் அரசுப்பள்ளி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அரியலுார், பெரியவளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 30 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தது.





 இதையறிந்த, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கான, காரணம் என்னவென்று இக்கிராமத்தில் உள்ள பெற்றோரிடம் விசாரித்தனர்.அப்போது, பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இப்பள்ளியை புனரமைக்க முடிவு செய்தனர். இதற்கென பிரத்யேகமாக ஒரு, 'பேஸ்புக் குரூப்' உருவாக்கி, இப்பள்ளியின் பழைய படத்தை பதிவிட்டு, விருப்பமுள்ள நன்கொடையாளர்கள் பள்ளியை புனரமைக்க நிதியுதவி தருமாறு கோரினர்.
இதையறிந்த பெயின்ட் பாண்டிச்சேரி என்ற அமைப்பு, பள்ளியை பெயிண்ட் அடித்து தர முன்வந்தது.அந்த அமைப்பைச் சேர்ந்த, 13 பேர் பெரியவளையம் கிராமத்தில், 10 நாட்கள் முகாமிட்டு, பள்ளி முழுவதும் பெயின்ட் அடித்து கொடுத்ததுடன், வகுப்பறை சுவர்களில் பொம்மைகள், வரைபடங்கள், தமிழ் எழுத்துகள், வாய்ப்பாடு போன்ற கல்வி தொடர்பானவைகளை வரைந்து கொடுத்துள்ளது.தற்போது, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் மல்டி கலரில் இப்பள்ளி ஜொலிக்கிறது.இத்தோடு, நன்கொடையாளர்கள் மூலம் கிடைத்த நிதியால், பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் விளையாட்டு உபகரணங்கள், லைட், மோட்டார், குடிநீர் பைப் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும், கம்ப்யூட்டர், புரஜெக்டர் உள்ளிட்ட அதிநவீன வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுஉள்ளனர்.இக்கிராமத்தில் உள்ள பெற்றோரை நேரில் சந்தித்து, இப்பள்ளியிலேயே தங்களது பிள்ளைகளை 1ம் வகுப்பில் சேர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பெற்றோரும், இப்பள்ளியில் நிச்சயமாக தங்களது பிள்ளைகளை சேர்ப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Comments

Post a Comment