ஊதிய முரண்பாடு: மனுக்கள் அளிக்க நாளை கடைசி

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக, ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தப் பரிந்துரைகளில் முரண்பாடுகள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர். ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினர் உள்பட சிலர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊதியங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

கோரிக்கை மனுக்கள்:

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அரசு அமைத்துள்ள குழுவிடம் அளிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமைக்குள் (மே 15) அனுப்ப வேண்டுமெனவும், அரசு ஊழியர் -ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் மனுக்களை அளிக்கலாம் எனவும் ஒரு நபர் குழுவின் தலைவர் சித்திக் தெரிவித்திருந்தார். கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.

நீட்டிக்கப்படுமா?

கோடை விடுமுறை என்பதால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களில் பலரும் வெளியூர்களுக்குச் சென்றிருப்பதால் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஒரு வார காலம் அவகாசத்தை நீட்டித்தால் தனிநபர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்திட வாய்ப்பு ஏற்படும் என ஆசிரியர் -அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments