அரசுப் பள்ளிகளில் `ஆல் பாஸ்’ எண்ணிக்கை குறைந்தது ஏன்...? பள்ளிக்கல்வித்துறை ஆய்வு

மே 16-ம் தேதி வெளியிடப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகுறித்து, பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 

இதில், அரசுப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையும் ஆசிரியர்களும் ஆராய்ந்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 6,754 மேல்நிலைப் பள்ளிகளில் 1,907 பள்ளிகளில் முழு அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

இதில் 2,574 அரசுப் பள்ளிகளில் 238 பள்ளிகளில் மட்டுமே 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதாவது, 10 சதவிகிதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே முழு தேர்ச்சி என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தனியார் பள்ளிகளுடன் போட்டிபோடும் திறன் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம்


தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் அருளானந்தம், ``தனியார் பள்ளிகள், `பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயிரியல் பாடப்பிரிவிலும், 450 மதிப்பெண் பெற்றவர்களை இதர பிரிவுகளிலும் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கிறோம்' என்று விளம்பரம் செய்து, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர்

இதனால் நன்கு படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு வருவது தடுக்கப்படுகிறது

மேலும், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விருப்பப்படி பள்ளிகளில் அனைத்து பிரிவுகளிலும் இடம் வழங்கப்படுகிறது. முதலில் மாணவர்கள் ஆர்வத்தில் கணிதம், உயிரியல் பிரிவில் சேர்வார்கள். 


பிறகு, கணிதப் பிரிவில் நிலைக்க முடியாமல் `வேறு பிரிவுக்கு மாற வேண்டும்' என்பார்கள். காலம் தாழ்ந்து வேறு பிரிவுக்கு மாற முடியாததால், பொதுத்தேர்வில் வெற்றியைப் பெற முடிவதில்லை ஒவ்வொரு முறையும் தேர்வுத்தாள் திருத்தும்போது மொழிப்பாடங்களுக்கு முழு மதிப்பெண் வழங்குவதில்லை என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மதிப்பெண் குறைத்து வழங்க தேர்வுத் துறை உத்தரவிட்டது. 

இதனால் ஏராளமான மாணவர்களின் மதிப்பெண் குறைக்கப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் செயல்பாடு எங்கெல்லாம் சிறப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். சமூகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளே அரசுப் பள்ளியை நாடுகின்றனர்

இப்போது, கட்டாயக் கல்விச் சட்டத்தில் தனியார் பள்ளியில் காலி இடங்கள் இருக்கும்போது அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்குகிறது. இதனால் நன்றாகப் படிக்கும் ஒன்றிரண்டு மாணவர்களும் தனியார் பள்ளியில் சேர்கின்றனர்.

மேலும், ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் முப்பருவக் கல்விமுறையில் பயில்கின்றனர். ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட பாடங்களைப் படித்தால் மட்டும் போதுமானதாக இருந்தது.

ஆனால், பத்தாம் வகுப்பில் முழுப் புத்தகத்தையும் படித்துத் தேர்வு எழுதவேண்டிய நிலைக்கு உள்ளாகி, ஐந்து பாடங்களைத் தட்டுத்தடுமாறி தேர்ச்சி பெறுகின்றனர். பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்துக்கு ஒரு பாடநூல். ஆனால், 11-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு பாடநூல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு தாள்கள் என பாடச்சுமைகள் கூடுகின்றன.


பத்தாம் வகுப்பில் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற சிரமப்படுகின்றனர். இதுவும் மாணவர்கள் முழுமையாகத் தேர்ச்சி பெறாததற்கு முக்கியக் காரணம்" என்றார்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் மைக்கேல்ராஜ், ``கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் முழு அளவில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துவந்தது.

ஆனால், முழு அளவில் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் முழு பணியாற்றுவதுதான்

தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது மட்டுமே அரசுப் பள்ளியில் முழு அளவில் தேர்ச்சிபெறுவது என்பது குறைவாக இருக்கிறது.

இதற்குக் காரணம், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதுவும் முழு அளவில் வெற்றி பெறாமல்போனதற்குக் காரணம். அறிவியல் பாடங்களில் செய்முறைத் தேர்வுகள் மாணவர்கள் தேர்ச்சிபெறக் கைகொடுக்கின்றன.


ஆனால், கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்திருந்தாலும் அவர்களைப் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கிறோம். இதுவும் தேர்வின் முடிவில் எதிரொலிக்கிறது" என்றார்.(மின்னல் கல்வி செய்தி.)

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழகத்தின் வட மாவட்டங்களில் மதிப்பெண் குறைந்ததற்கு, வட மாவட்டங்களில் பணியாற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் இடமாற்றத்தால், வட மாவட்டங்களில் ஆசிரியப் பணியிடங்கள் காலி இடங்களாக இருக்கின்றன இதனால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.

இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் 27,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதும் நடந்துவருகிறது. ஆனால், பள்ளித் தேர்வு முடிவு மட்டும் யோசிக்கவைக்கிறது

Comments