நீட் தேர்வு கீஆன்சர் வெளியீடு மாற்றம் இருந்தால் 27க்குள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் விடைக் குறியீட்டை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது.மாணவர்கள் தங்கள் விடைகளில் வித்தியாசம் இருந்தால் அதுகுறித்து 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.




இந்த ஆண்டு மே 6ம் தேதி நீட் தேர்வு நடந்தது.இதையடுத்து, சிபிஎஸ்இ தனது இணைய தளத்தில் நீட் தேர்வின் விடைக்குறியீட்டை வெளியிட்டுள்ளது. அத்துடன்  நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் ஓஎம்ஆர் தாளையும் வெளியிட்டுள்ளது.விடைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடைகளை மாணவர்கள் தங்கள் ஓஎம்ஆர் தாளில்  குறிப்பிட்டுள்ள விடைக்குறியீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இவற்றை இணைய தளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி லாக்இன் செய்து தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள் சரியாக விடைக்குறியீடு செய்திருந்து சிபிஎஸ்இ மதிப்பெண் வழங்கவில்லை என்ற நிலை இருந்தால் அதுகுறித்து விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

நீட் தேர்வில் ஏ,பி,சி, டி. என்ற வரிசைகளில் கேள்வித்தாள்வழங்கப்பட்டன.அதனால் கேள்வித்தாளின் குறியீட்டு எண்களைக் கொண்டு மேற்கண்ட விடைகளை சரிபார்க்க வேண்டும். விடைக்குறியீடு 27ம் தேதி வரை இணைய தளத்தில் பார்க்க முடியும்.

இந்த விடைக்குறியீடு, மாணவர்களின் விடைத்தாள் குறியீட்டு எண்கள், கேள்விக்கான விடை ஆகியவற்றில் மாற்றம் இருப்பதாக கருதினால் ரூ1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் மூலமாக 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்என்றும் மேற்கண்ட கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Comments