10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள்  இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே  மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிந்தன. இதில் மொழிப்பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள்  கடந்த வாரமே திருத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கணக்குப் பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் 24ம் தேதி திருத்த வேண்டும் என்று  தேர்வுத்துறை உத்தரவிட்டு இ ருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் 70 மையங்களில் நேற்று பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத் தேர்வின் விடைத்தாள்கள்  திருத்தும் பணி தொடங்கியது. திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வுக்கான விடைக்குறிப்பை(Key Answer)  தேர்வுத்துறை வழங்கியுள்ளது.

கேள்வித்தாளில் பகுதி இரண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள்  வழங்க வேண்டும். இந்நிலையில் கேள்வி எண் 17ல் கேட்கப்பட்ட கேள்விக்கு(Range) விடை எப்படி இருக்க வேண்டும் என்று பாடப்புத்தகத்தில்  பின்பகுதியில் உள்ள கேள்வி பதிலில் 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது -1, +1, -1/2. +1/2 ஆகியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  அரசு அச்சிட்டு வழங்கியுள்ள வினா வங்கியிலும் மேற்கண்ட நான்கு விடைகளே அச்சிடப்பட்டுள்ளது. 

ஆனால், விடைத்தாள் திருத்துவதற்காக  தேர்வுத்துறை கொடுத்துள்ள விடைக்குறிப்பில் -1, +1 மட்டும் எழுதி இருந்தால் மட்டுமே 2 மதிப்பெண் வழங்க  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 4 பதில்கள் எழுதி இருந்தால் அந்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா  கிடைக்காதா என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு முழு  மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்,மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேர்வுத்துறை கூறுவது என்ன?

பத்தாம் வகுப்பு கணக்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ள விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வினா எண் 4: தமிழ் வழிப்பாட விடைக்கு மட்டுமே விடைக்குறிப்பின்படி ‘முயற்சி செய்திருப்பின் உரிய மதிப்பெண்’ வழங்க வேண்டும். ஆங்கில  வழிப் பாட விடைக்கு விடைக்குறிப்பின்படி விடை எழுதியிருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும்.வினா எண் 17, 28, 34, 39: விடைக்குறிப்பின்படியே மதிப்பெண் வழங்க வேண்டும்.

Comments