JIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சேவை வழங்கப்பட உள்ளது.


டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. இதையடுத்து, அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜியோ நிறுவனத்தில் 17 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி ஏற்கெனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும்.


ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments