தேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவனுக்கு போலீஸாரின் சமயோசித உதவி: பள்ளியே திரண்டு பாராட்டு

தேர்வுக்கு 6 நிமிடமே உள்ள நிலையில் கிராமத்தில் தவித்த மாணவனை சமயோசிதமாக செயல்பட்ட காவலர்கள் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்து தேர்வெழுத வைத்தனர். தேர்வெழுத உதவிய காவலர்களை பள்ளியே திரண்டு பாராட்டியது.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் எல்லைக்குட்பட்ட கொந்தமூர் கிராமத்தில் அரசு மேல் நிலை பள்ளியில் பிளஸ் 1 தேர்வு நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கம் பக்கத்து கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர்கள் பேருந்து, மற்றும் சைக்கிளில் வந்துச்செல்கின்றனர்.

நேற்றும் பொதுதேர்வு நடந்தது. அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்த நிலையில் பள்ளி தேர்வு 10.00 மணிக்கு துவங்க இருந்தது. ஆனால் தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள +1 இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவர் மட்டும் வரவில்லை என்று தெரிந்தது. காலை 9-54 மணி ஆனது தேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் மாணவன் மோனிஷ் வரவில்லை.

இதனால் பதற்றமடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் அரசுத் தேர்வு பணிக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த முதல் நிலை காவலர் மதன் என்பவரிடம் பள்ளியில் சிறப்பாக படிக்க கூடிய மாணவன் மோனிஷ் என்ன காரணமோ தெரியவில்லை தேர்வு துவங்க 5 நிமிடம் தான் உள்ளது இதுவரை வரவில்லை. அவர்கள் வீட்டுக்கு போன் செய்தாலும் போகவில்லை எதாவது உதவ முடியுமா? என்று கேட்டுள்ளார்.

உடனே சமயோசிதமாக செயல்பட்ட காவலர் மதன், மாணவரின் விலாசம் எது என்று கேட்டு குறித்துக்கொண்டார். மாணவன் வசிக்கும் இடம், பள்ளியிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்கோடிபாக்கம் என்ற கிராமம் என தெரியவந்தது.

அந்த கிராமம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு அந்த ஊர் பக்கம் இன்றைய பகல் ரோந்து காவலர் யார் போனது என தனது ஸ்டேஷனுக்கு போன் செய்து காவல் நிலையத்தில் இருந்த எஸ்.ஐ விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். அவர் காவலர் மணிகண்டன் என்பவர் ரோந்துப்பணிக்கு போயுள்ளார் என்று கூறியுள்ளார்.

உடனடியாக காவலர் மணிகண்டனுக்கு போன் செய்த மதன் மாணவர் தேர்வுக்கு வராத விபரத்தை கூறி எப்படியாவது மாணவனை கண்டுபிடித்து பள்ளிக்கு அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளார். உடனே காவலர் மணிகண்டன் சிறிது தொலைவில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்று மாணவர் முனீஷை சந்தித்துள்ளார். தம்பி ஏன் தேர்வு எழுத செல்லவில்லை என கேட்க, மாணவர் பெற்றோருடன் ஏற்பட்ட சண்டையில் அழுதுகொண்டு தேர்வு எழுத செல்லாமல் மறுத்துள்ள வீட்டில் இருந்தது தெரியவந்தது.

உடனே காவலர் மணிகண்டன் மாணவரை சமாதானப்படுத்தி பெற்றோர் கூட கோபம் இருக்கலாம் அது நாளையே கூட மாறிவிடும் தேர்வு போனால் மீண்டும் வருமா என்று கூறி வா மோட்டார் சைக்கிள் தயாராக இருக்கிறது உன்னை 10 நிமிடத்தில் பள்ளியில் விட்டு விடுகிறேன் என்று அழைத்துள்ளார்.

மாணவர் தயங்கி சார் இதற்கு மேல் போனால் பள்ளியில் சேர்ப்பார்களா? என்று கேட்டுள்ளார். உன்னை அழைத்து வரச்சொல்லி எங்களிடம் சொன்னதே உங்கள் தலைமை ஆசிரியர் தான் என்று கூறினார். பின்னர் மாணவரை தனது இரு சக்கர வாகனத்தில் மாணவரை பாதுகாப்பாக அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தார்.


தலைமை ஆசிரியர் அனுமதியுடன் 10.10 க்கு தேர்வு அறைக்கு மாணவர் தேர்வு எழுத சென்றார். தேர்வு எழுதி முடித்த பின்னர் மாணவர் முனீஷ் தனக்காக காவலர்கள் இருவரும் மெனக்கெட்டதை அறிந்து நெகிழ்ச்சியடைந்தார். நேராக பள்ளி விட்டவுடன் தலைமை ஆசிரியருக்கு நன்றி சொன்னார். எனக்கு சொல்ல வேண்டிய நன்றியை நீ தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்த இரண்டு காவலர்களையும் சந்தித்து நன்றி சொல் என்று அனுப்பி வைத்தார்.

உடனடியாக காவல் நிலையம் சென்ற மாணவர் முனீஷ் ரோந்து காவலர் மணிகண்டனுக்கும் தேர்வு எழுத சமயோசிதமாக யோசித்து நடவடிக்கை எடுத்த முதல்நிலைக் காவலர் மதனுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். அப்போது காவலர்கள் இருவரும் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Comments