மாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் புலம்பல்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடத் தேர்வுகள் கணக்கு, இயற்பியல் தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று வேதியியல்  பாடத்துக்கான தேர்வு நடந்தது. 


அதில் இடம் பெற்ற கேள்வித்தாளில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தாலும் 3 மதிப்பெண்  கேள்விகள் 20 கொடுத்து அதில் 15 எழுத வேண்டும் என்று கேட்கப்பட்டது. அந்த கேள்விகள் பெரும்பாலும் கடினமாக இருந்தன. குறிப்பாக 15  கேள்விகள் தெரிவு செய்து எழுத வேண்டிய நிலையில் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத முடிந்ததாக மாணவ மாணவியர்  தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் கேள்விகளில் 4 கேள்விகள் பாடப்பகுதியில் உள்ளே இருந்து எடுத்து சுயமாக கேட்கப்பட்டு இருந்தது. கட்டாய  கேள்வியாக கேட்கப்பட்ட 70 வது கேள்வி பலருக்கு எளிதாக இருந்த நிலையில் பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமாக இருந்துள்ளது. அதனால்  சென்டம் குறையும் வாய்ப்புள்ளதாக மாணவ- மாணவியர் தெரிவித்தனர். இதையடுத்து ஏப்ரல் 2ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு வருகிறது.

34 பேர் சிக்கினர்
பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல்  தேர்வில் பறக்கும் படையினர் நேற்று அனைத்து தேர்வு மையங்களிலும் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். அவர்களுடன் அண்ணா பல்கலைக் கழக பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பிட் அடித்ததாக மதுரை2, ஈரோடு 1,  சேலம் 2,கரூர்1, அரியலூர்1, திருச்சி 6, விழுப்புரம் 21 பேர் என மொத்தம் 34 பேர் பறக்கும் படையிடம் சிக்கினர். அவர்கள் மீது துறை ரீதியான  நடவடிக்கை எடுக்க பறக்கும் படையினர் பரிந்துரை செய்தனர்.

Comments