ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், தேர்வுகால பணிக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 15% வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பொதுத்தேர்வு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் வழங்கப்படும் உழைப்பூதியம், உள்ளூர் வெளியூர் பணியாளர்களுக்கான தொகுப்புப்படி உள்ளிட்டவை மிக குறைவாக உள்ளது இதனை உயர்த்த வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 21ம் தேதியிட்ட புதிய அரசாணையை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:

மேல்நிலை, ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு, இடைநிலை, எட்டாம் வகுப்பு, தொழில்நுட்ப தேர்வு ஆகிய தேர்வு காலங்களில் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக 15 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேல்நிலை தேர்வு, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுக்கு 3 மணி நேர உழைப்பூதியம் தாள் ஒன்றுக்கு ரூ.7.50ல் இருந்து ரூ.10ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக பகலில் 12 விடைத்தாள்களும், பிற்பகலில் 12 விடைத்தாள்களும் திருத்துகின்றனர். 

இடைநிலை கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு ரூ.6ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.2.50ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் பணியாளர்களுக்கான தொகுப்புபடி மேல்நிலை தேர்வு, தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.100ம், வெளியூர் பணியாளர்களுக்கு ரூ.200ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை 8ம் வகுப்பு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.80ம், வெளியூர் பணியாளர்களுக்கு ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

முகாம் உழைப்பூதியமும் மாற்றப்பட்டுள்ளது. முகாம் அலுவலர் உழைப்பூதியம் ரூ.750ல் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலருக்கு ரூ.660ல் இருந்து ரூ.1,200ம், ெதாடர்பு அலுவலருக்கு ரூ.200ல் இருந்து ரூ.500ம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், தேர்வுப்பணிகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்கிட நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது என்றனர்.

Comments