பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி - பெற்றோர், பொதுமக்கள் எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்க பெற்றோரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றங்கள் பெருகி வருவதால், பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்குவது குறித்தும்,பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 


தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி சார்பில் உதவி ஐஜி மகேஸ்வரன், நீதிபதி கிருபாகரன் முன் ஆஜராகி பதிலளித்தார்.அவரது பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:“பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி வழங்குவதற்கு பெற்றோரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதுதவிர, 32 மாவட்டங்களிலும், 10 மண்டலங்களில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு நடமாடும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம், 2014-15 இல் 3 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 2015 -16 இல் 3 லட்சத்து 83 ஆயிரம் மாணவர்களுக்கும், 2016-17 இல் 2 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.


கண்காணிப்பு கேமரா விவகாரத்தில், அரசு மற்றும் வர்த்தக கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்கி, 2012 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 87 ஆயிரத்து 743 அரசு மற்றும் வர்த்தக கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


''இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments