வலுவிழக்கிறது தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள்


தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விரைவில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் அமைக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிட உள்ள  நிலையில், ஏற்கனவே 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ‘பள்ளி மேலாண்மை குழு’க்களின் நிலை என்னவாகும் என்ற  கேள்விக்குறி எழுந்துள்ளது. 

பள்ளி மேலாண்மை குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு, செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக பெற்றோர்-ஆசிரியர் கழகம் அமைத்தால், ஒன்றுக்கொன்று முரண்பாடாகி, பள்ளிகளில் பல்வேறு குளறுபடி ஏற்படும், தற்போது அமலில்  உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் அனைத்தும் வலுவிழக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய  அரசின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளிகளை நடத்தி வரும் ‘சுடர்’ தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜ் கூறியதாவது:

பெற்றோர்-ஆசிரியர் கழக விதிகளின்படி, அந்தந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படித்தால் மட்டுமே இப்பதவிக்கு போட்டியிட முடியும். இதில்  முறைகேடுகளும் அதிகளவில் நடைபெறும். இதை தடுப்பதற்காகத்தான், கடந்த  2011ம் ஆண்டு முதல் 1-8 வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவில், பள்ளி குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள்,  உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என 20 பேர் இருக்கிறார்கள். 


இக்குழுவில் 75 சதவீதம் பேர் பெற்றோர்தான் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ளது. குறிப்பாக, 20 பேரில் 10 பேர் பெண்களாக இருத்தல் அவசியம். இக்குழுவின் தலைவராக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  அமைப்பாளராக பள்ளியில் தலைமை ஆசிரியர் செயல்படுவார். இக்குழு ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. 

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதம் ஒருமுறை கூட்டப்படுகிறது.பெற்றோர்-ஆசிரியர் கழகம் அமைத்தால் பணிகள் எதுவும் நடக்காது. கல்வித்துறை நடவடிக்கையில் அரசியல் தலையீட்டிற்கும், முறைகேட்டிற்கும் வழிவகுக்கும். அத்துடன், மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி  பெறும் உரிமை சட்டமும் கேள்விக்குறியாகிவிடும். தற்போது இயங்கும் இந்த மேலாண்மை குழுக்களை சட்டப்படி கலைக்க தமிழக அரசுக்கு அதிகாரமும் இல்லை. 

ஆனால், ெசயல்பாடின்றி முடக்கி வைக்க முடியும். அதற்காகத்தான் பெற்றோர்-ஆசிரியர் கழகம் ெகாண்டுவரப்படுகிறது. இது, ஆசிரியர்-பெற்றோர் இடையே மோதல் போக்கை உருவாக்கும்.இவ்வாறு நடராஜ் கூறினார்.

Comments