உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில், நடப்புகல்வியாண்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைஉள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும், ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு தனித்தனியே இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.நடப்பு கல்வியாண்டில், ஒருங்கிணைக்கப்பட்ட கவுன்சிலிங், ஜூன், 11ல் தொடங்குகிறது.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வருவாய் மாவட்டத்துக்குள் இடமாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் என, கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு கல்வியாண்டுக்கான கவுன்சிலிங் நடைமுறையில், இது மாற்றியமைக்கப்பட்டு, கல்வி மாவட்டத்துக்குள் இடமாறுதல், கல்வி மாவட்டம் விட்டு, கல்வி மாவட்டம் இடமாறுதல் என அமல்படுத்தப்பட்டது. 


இதனால், கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், நகர்ப்பகுதிகளுக்கு, இடமாறுதல் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனக்கூறி, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கவுன்சிலிங் நடைமுறையில், திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, வழக்கம் போல், வருவாய் மாவட்ட அளவில், கவுன்சிலிங் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

Comments