சி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்

சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது.

இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சிமையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித தேர்வும் மீண்டும் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு பாடங்களுக்கும், தேர்வுக்கு முன், வினாத்தாள் லீக் ஆனதால், மறு தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியத்தில் இருந்து, டில்லி போலீசில், மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது, சிறப்பு பிரிவு, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.முதற்கட்டமாக, இணையதளத்தில் பரவிய வினாத்தாள், சைபர் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர்.

அதில், இடம் பெற்ற, கணினி ஐ.பி., எண் வழியாக, சிலரை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லியில் உள்ள சில பயிற்சி மையத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் சிலர், விசாரணையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, மறுதேர்வில், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், வினாத்தாள்களை, 'பாஸ்வேர்ட்' வைத்து, டிஜிட்டல் முறையில் தேர்வு நாளில் வழங்க, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு வாரியம் முடிவு செய்து உள்ளதாக, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Comments