இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளில் கணினி வழி கற்றல் திட்டம்: ஆய்வகங்கள் தொடங்க 420 கோடி ஒதுக்கீடு!

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் இணையதளம் மற்றும் வைபை வசதியுடன் கணினி வழி கற்றல் திட்டத்துக்காக கணினி ஆய்வகங்கள் ₹420 கோடி செலவில்தொடங்க தமிழக அரசு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது.\




தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. சிபிஎஸ்இக்கு இணையான பாடத்திட்டம், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி, ஸ்மார்ட்  வகுப்பறைகள், பாடப்புத்தகங்களில் கியூஆர் கோடு மற்றும் பார்கோடு இணைத்து பாடங்கள் வடிவமைப்பு என்று அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர 3 ஆயிரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படுகிறது. இதற்காக 30 ஆயிரம் கையடக்க கணினி எனப்படும் டேப்லெட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் ஒரு  வார காலத்தில் விடப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசின் ஐசிடி கணினி வழி கற்றல் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என்று அரசு  அறிவித்தது. ஆனால், இதற்காக டெண்டர் விடுவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்று ஐசிடி திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு  வரப்படுகிறது.இதற்காக மாநிலம் முழுவதும் 3,100 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,940 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்காக ₹420 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டரும்  விடப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடங்கப்படும் கணினி ஆய்வகங்களில் தலா 10 கணினிகள் என மொத்தம் 60 ஆயிரத்து 300 கணினிகள் இணையதள வசதி மற்றும் வைபை வசதியுடன் அமைக்கப்படுகின்றன. இந்த தகவலை  ஆசிரியர் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Comments