பி.இ. கலந்தாய்வு: 50 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.பொறியியல் கலந்தாய்வை முதன் முறையாக ஆன்-லைனில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.



இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காகவும், அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவிமையங்களை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இந்த ஆன்-லைன்கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3 ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை50,248 பேர் ஆன்-லைனில் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 6,235 பேர் மட்டுமே உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர். விண்ணப்பிக்க மே 30 கடைசித் தேதியாகும்.

Comments