6,029 அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகம்

''தமிழகத்தில், 6,029 அரசுப்பள்ளிகளில், தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க, 462 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி தெரிவித்தார்.

கோவை, கிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, உண்டு, உறைவிட பயிற்சி வகுப்புகள் துவக்க விழா, நேற்று நடந்தது. மாணவர்களுக்கு சிறப்பு கையேடு மற்றும், 'லேப் - டாப்' வழங்கிய, அமைச்சர் வேலுமணி பேசியதாவது:மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, விலக்கு பெறும் முயற்சிகள் நடக்கின்றன. இருப்பினும் தமிழக மாணவர்கள், போட்டித்தேர்வு களை எதிர்கொள்ளும் வகையில், ஒன்றிய வாரியாக, 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 70 ஆயிரத்து 419 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மண்டல உண்டு உறைவிட பயிற்சியில், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களில், தமிழ் வழியில் படிக்கும், 350 மாணவர்களுக்கு, மே, 4 வரை வகுப்புகள் நடக்கின்றன.

இதுதவிர, 3,000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், 60 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும், 2018 - 19 கல்வியாண்டில், 3,090 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 2,939 மேல்நிலைப்பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், 462 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.

Comments